சிங்கை செண்பக விநாயகர் ஆலயத்தில் நிகழும் 2010 ஏப்ரல் 02 முதல் 04 திகதி வரை மதியம் 1.30 முதல் 8.30 வரை சைவ சித்தாந்த வகுப்புகள் வெகு சிறப்பாக நடந்தது. கூட்டத்தின் நாயகராக முனைவர் ஆறு-நாகப்பன் அவர்கள் சித்தாந்த சைவம் பற்றிக் கருத்துச் செறிவுடனும் தகுந்த ஆதாரங்களுடனும் நற்றமிழிலும் நயம்பட வகுப்புகளை நடத்தினார்.
வகுப்பிற்கு வந்திருந்தவர்களில் நான்தான் ஆக குறைந்த அகவையுடையவன் என்று தோற்றத்தினை வைத்து யூகித்த வகையில் முடிவுக்கு விழைகிறேன். ஏனென்றால் வந்திருந்தவர்களில் மூன்று அல்லது நால்வரை தவிர யாவரும் 30 அகவையை எட்டியவர்கள்
சைவத்திற்கும் எனக்குமான தொடர்பு என்னவென்று கேட்டால் விவரம் அறிந்து நானாக விரும்பி இறைவனை வணங்கிய போது ஆழ்மனதில் பதிந்தவர் ,ஒர் ஆன்ம உணர்வை என்னுள் ஏற்படுத்தியவர் முழுமுதற் கடவுள் செந்தழல் மேனியன் சிவபெருமானின் லிங்க ரூபம். அந்த கால கட்டம் தொடங்கி ( பதின்ம வயதின் இறுதியில்,இந்து மதம் பற்றிய விவேகானந்தரின் ஞான தீபங்கள் புத்தங்கள் படிக்கும் போது ,சுருங்க சொல்லின் 20ம் அகவையில்) இப்போது வரையிலும் எந்த ஆலயங்களுக்கு சென்றாலும் கூட என் மனதில் முன் கற்ப கிரகத்தில் வீற்றிருப்பது நான் வாரமொருமுறை திருச்சியில் படிக்கும் நீராடலாமல் கூட ஒரு நாள் சென்று வந்த திருவானைக்காவலின் சிவ லிங்கமே என்று என் மனதில் இருத்தி வணங்குவது வழக்கமாய் கொண்டுள்ளேன்.
இது தவிர இளம் பிராயத்தில் ஊரில் மார்கழித் திங்களில் கூட்டு வழிபாட்டில் (பஜனையில்) திருவெம்பாவை மற்றும் சில சிவப்பாடல்கள் பாடியதுண்டு- மற்றபடி சைவம் பற்றிய அறிதல் தெளிதல் புரிதல் இல்லை
எனக்கு தெரிந்த வரையில் சைவ சிந்தாந்தம் என்பது ஞானத்தின் மூலம் இறைவனை அடைதல் என்று அறிந்திருந்தேன்
நான் முதல் நாள் இரண்டாம் வகுப்பிலிருந்து கலந்து கொண்டேன். பிடிக்கவில்லை என்றால் எந்நேரமும் வெளியேறி விடலாம் என்றெண்ணி எனக்குள் ஒர் உள் உடன்படிக்கையின் படிதான் ஆலயப்படியேறினேன்.
ஆனால் மூன்று நாளும் வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்று முதல் நாள் வகுப்பு முடிந்து மாடிப்படி விட்டு இறங்கியபோது முடிவெடுத்தேன் என்பதற்கு வகுப்பாசிரியரை விட சித்தாந்த சைவத்தினைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் முக்கிய காரணமாய் இருந்தது. அதற்கு காரணம் முதல் நாள் வகுப்பினை நயம்பட எடுத்துரைத்த ஐயா ஆகும்.
என்னுடைய புரிதலிருந்தும் என் வகுப்புக்குறிப்புகளிலிருந்தும் நண்பர் பதிவர் வெற்றிக் கதிரவன் உதவியோடும் நானறிந்த இந்த சித்தாந்த சைவக் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
வகுப்பாசான் முனைவர் ஆறு,நாகப்பன், திரு செல்வ குமார், திரு பாலாஜி ஆலய செயலர் திரு மதிவண்ணன், திரு,மாணிக்கம் மற்றும் இச்சிறப்பான காரியம் நடக்க துணை நின்று துாண்டு கோலாய் அமைந்த அனைத்துள்ளங்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகள்.
--- தொடரும்
பின்குறிப்பு: நடைப்பெற்ற வகுப்பில் என்னுடைய குறிப்புகளை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன். முழுமையாக சைவ சித்தாந்தம் படிக்க முனைவர் ஆறு நாகப்பனின் சித்தாந்த சைவம் நுாலினை நாடுக
0 comments:
Post a Comment